பயனுள்ள சிலவை

கழுத்து வலி, பெரும்பாலோருக்கு வரும். அதிலும், கம்ப்யூட்டரே கதி என்று இருக்கும் இளைய வயதினருக்கு அடிக்கடி வரும். அதற்கு ஏற்ப பழக்கத்தை மாற்றினால், கழுத்து வலி போய்விடும். ஆனால், சில வகை கழுத்து வலிகள் இருக்கின்றன. கீழ் கண்ட காரணங்களில் கழுத்து வலி வந்தால் உஷாராகி விடவேண்டும்.

* அதிக காய்ச்சல் ஏற்படும் போது…
* காரணமே இல்லாமல் எடை குறைவது.
* தலை சுற்றல், மயக்கம் வரும் போது.
* கை நடுக்கம் போன்ற நரம்பு கோளாறுகள்.
* கழுத்து வலி அதிகமாக இருக்கும் போது.
* கழுத்து இறுக்கமாக இருக்கும் போது.

இப்படிப்பட்ட காரணங்களினால், கழுத்து வலி வந்தால் , தைலம் தடவிக்கொண்டிருக்கக் கூடாது; டாக்டரிடம் போய் விட வேண்டும்.

அல்சீமர்ஸ் நோய் பரம்பரையாக நீடிக்குமா?

முதுமையில் வரும் அல்சீமர்ஸ் நோய், யாருக்கு வரும் என்று கேட்டால், அதற்கான அறிகுறியை கூட சொல்ல முடியாது. ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
நம் நாட்டிலும் இப்போது இந்த நோய் தலைதூக்கி வருகிறது. முதலில் நினைவாற்றல் மங்கும்; போகப்போக முடக்கி விடும். இது பரம்பரையாக நீடிக்கும் நோய் என்று சொன்னாலும் மரபணு ரீதியாக மாற்றம் செய்தால் தப்பிக்க வழியுண்டா என்றும் ஆராய்ச்சியாளர்களால் சரிவர சொல்ல முடியவில்லை. ஆனால், அல்சீமர்ஸ் வருவதை தவிர்க்க இரு வழிகள் உள்ளன; ஒன்று ; முடிந்தவரை உடற்பயிற்சி; மூளைக்கு வேலை; இரண்டாவது, அதிக பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது.

டென்ஷன் தலைவலி யாருக்கு வரும்?

ஒற்றைத் தலைவலி, தொகுப்பு தலைவலி போன்ற பல தலைவலிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலோருக்கு வருவது டென்ஷன் தலைவலி தான். இது அரை மணி நேரம் முதல் ஒரு வாரம் முழுக்க நீடிக்கும்.
கம்ப்யூட்டர் உட்பட “ஒயிட் காலர்’ பணிகளில் இருப்பவர்களுக்கு இது சகஜமாக வரும். டென்ஷன் ஏற்பட்டதும், கழுத்து, முகத்தில் உள்ள தசைகளில் சில இறுக்கமாகும் அதன் பின் தலைவலி ஆரம்பிக்கும்.
தசைகள் தளர்வடைந்ததும் தலைவலி போச்ச். டென்ஷன் ஏற்பட்டதும் தசைகள் ஏன் இறுக்கமடைகின்றன என்பதற்கு நிபுணர்களிடம் பதில் இல்லை.

குழந்தைகளுக்கும் மன அழுத்தம் வரும்

பெரியவர்களுக்கு மட்டும் தான் ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம் வருமா? குழந்தைகளுக்கு கூட வருமாம். சிறிய வயதில் சில அசாதாரண காரணங்களில், இழப்புகளால் இப்படி குழந்தைகளுக்கு மன அழுத்தம் வரும் என்கின்றனர் நிபுணர்கள். சிறிய குழந்தையாக இருந்தால், வீட்டில் அடம் பிடிக்கும்; பெற்றோருக்கு கவலையை ஏற்படுத்தும். பெரிய குழந்தையாக இருந்தால், பள்ளியில் படிக் காது; அடிக்கடி சண்டை போடும். மன அழுத்தத்துக்கு இது தான் அறிகுறி. பெற்றோர் இதை உணராமல் அடிக்கவோ, கோபப்படவோ கூடாது என்பதும் டாக்டர்களின் கருத்து.

நீச்சல் நல்லது ஆனால்…

நீச்சல் பயிற்சி பெறுவது நல்லது தான். ஆனால், குளோரின் கலந்த தண்ணீர் உள்ள நீச்சல் குளமாக இருந்தால் அதில் பயிற்சி பெறுவது நல்லதல்ல என்று பெல்ஜியம் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குளோரின் கலந்த தண்ணீரில் நீச்சல் அடிக்கும் போது, பலருக்கு ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோய் வருகிறது. சிலருக்கு தோல் பிரச்னை ஏற்படுகிறது என்பது சில பேரை சோதித்தபோது தெரியவந்துள் ளது.
இளம் வயதினர், குளோரின் கலந்த தண்ணீரில் நீச்சல் பயின்றால், உடனே பாதிப்பு வராது; சுவாசக் கோளாறில் ஆரம்பித்து கடைசியில் ஆஸ்துமாவில் கொண்டு விடும் ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பர்கர், பிட்சாவுக்கு மட்டும் ஜொள்ளு வளர் இளம் வயதினர் அதிகம் விரும்பிச் சாப்பிடுவது பர்கர், பிட்சா , ஐஸ்கிரீம் போன்றவை தான். இவற்றில் எல்லாவற்றிலும் “சாச்சுரேட்டட்’ கொழுப்பு உள்ளது. இந்த வகை கொழுப்பு அயிட்டங்களை சாப்பிடுவோரை, இன்னும் சாப்பிடத் தூண்டுவது எது தெரியுமா? மூளையில் உள்ள ஒரு வகை ரசாயனம் தான்.

பொதுவாக, பசித்தால் சாப்பிட மூளை கட்டளையிடும். கட்டளை வந்த பின், பசியெடுக்கும். பசி தீர்ந்தவுடன், மீண்டும் கட்டளை வரும், பசியை தூண்டும் சுரப்பி முடங்கி விடும். ஆனால், கொழுப்பு உணவு வகைகளை சாப்பிடும் போது, இந்த சுரப்பிகளை முடக்க கட்டளையிட்டாலும், முடங்காது. மூளையில் உள்ள ரசாயனம் செய்யும் வேலை தான் இது.